இட்லி... ஒவ்வொரு தமிழனின் அன்றாட வாழ்வில் கலந்துவிட்ட ஒன்று. எந்த மதமாக/சாதியாக இருந்தாலும், சைவமோ, அசைவமோ, தமிழகத்தின் எந்த பகுதியை சார்ந்தவராக் இருந்தாலும் இட்லி என்பது அனைத்து தமிழனின் அன்றாட உணவில் அங்கம் வகிக்கிறது.
ஒவ்வொரு தமிழனின் வீட்டிலும் ஒரு குழந்தைக்கு முதலில் ஊட்டப்படும் உணவு இட்லியாகத்தான் இருக்கும். உடல்நிலை சரியில்லையா இட்லியும், இடியாப்பமும்தான் முதல் உணவு. பிள்ளை பெற்றவுடன் தாய்க்கு முதல் உணவு இட்லிதான். இப்படி நீக்கமற நிறைந்து இருக்கிறது இட்லி தமிழனின் வாழ்வில். சிறு வயதில் தினமும் காலை இட்லிதான் உணவு என்பதால் வெறுத்து போய் பின்னர் இட்லியை கண்டாலே சாப்பிட மறுக்கும் நிலைக்கும் சிலர் தள்ளப்படுகின்றனர்.
இட்லி என்பது - ஊற வைக்கப்பட்ட அரிசி, உளுந்து, வெந்தையம் இவற்றை அரைத்து, சேர்த்து சிறிது நேரம் புளித்த பின் இட்லி தட்டில் ஊற்றி ஆவியில்(பேய் இல்லை) நீராவியில் வேக வைத்து தயாரிப்பது. இதற்கு பல வகையான சட்னி தொட்டுக்கலாம். தேங்காய் சட்னி, வேர்கடலை சட்னி, வெங்காய சட்னி, தக்காளி சட்னி, பொதினா சட்னி, சாம்பார், குருமா, இட்லி பொடி, பொட்டுக்கடலை தூள், சக்கரை, நெய் + சக்கரை, தயிர் + சக்கரை என் பல வகையான தொட்டுக்கைகள் இருக்கின்றன. இது சைவ பிரியர்களுக்கு. அசைவ பிரியர்களுக்கு ஆட்டுக்கறி குழம்பு, கோழிக்கறி குருமா, மீன் குழம்ப்பு, கருவாட்டு குழம்பு என பல தொட்டுக்கைகள் உண்டு.
இப்போதைக்கு விஷயத்துக்கு வருவோம். இப்படி தமிழனின் வாழ்வில் நீக்கமற நிறைந்துவிட்ட இட்லியின் தற்போதைய விலைப்பட்டியல் என்ன என்று ஆராய்ந்து பார்த்ததில் வந்த பதிவே இது.
காலையில் அவசரமாய் அலுவலகம் போகனும்னா அந்த ஹோட்டலில் போய் ரெண்டு இட்லி சாப்டு போயிடலாம் என்றுதான் நினைக்கத் தோன்றும். சாய்ங்காலம் அலுவலகம் விட்டு வருகின்ற வழியில் அசதியாய் இருந்தா அந்த கபேயில் போய் ஒரு ப்ளேட் இட்லி சாப்டு போகலாம் என்ற நிலை இருந்தது. இதெல்லாம் இப்போ நிறையவே மாறிவிட்டது.
இரண்டு இட்லியின் விலை தறுமாறாக ஏறிக் கிடக்கிறது. சிறிய ஹோட்டல் முதல் பெரிய ஹோட்டல் வரை இதே நிலைதான். என்னதான் கணக்கு போட்டாலும் ஒரு சுவையான இட்லி 3 வகை சட்னியோடு 1ரூபாய்க்குள்தான் விலை வரும். இந்த இட்லி ஒவ்வொரு ஹோட்டலிலும் என்னவெல்லாம் விலைக்கு விற்கப் படுகிறது. ஒரு கையேந்தி பவனில் 2இட்லியின் விலை 5ரூபாயில் ஆரம்பிக்கிறது இந்த விலைப்பட்டியல். இதில் இருந்து ஏறுமுகமாக ஹோட்டலின் நிலைக்கும் பாப்புலாரிட்டிக்கும் ஏற்ப மாறுபடுகிறது. 1 இட்லி 3ரூபாய், 5 ரூபாய், 7 ரூபாய், 10ரூபாய், 13ரூபாய், 15ரூபாய் என் வேறுபடுகிறது.
என்ன ஹோட்டலின் வசதிகள்தான் மாறுகின்றன. 2இட்லிக்கு 4 வகை சட்னி, சாம்பார், இதுதான் வித்யாசம். ஆனால் விலை மட்டும் வீட்டில் ஆகும் அடக்க விலைக்கு சுமார் 15 மடங்கு வரை அதிகம். இதில் இட்லிக்கு என்று கடை நடத்தும் சில இடங்களில் இட்லி தூளுக்கு தனியாக காசு வாங்குகிறார்கள்.
இதையெல்லாம்விட கொடுமையானது ஒன்று உண்டு. இட்லி என்றாலே மல்லிகப் பூ போன்று லேசாக இருக்கும். சில கடைகளின் இட்லியானது அத்தனை கல் போன்று இருக்கிறது. அதன் விலையையும் தன்மையையும் பார்த்து எரிச்சலில் சில நேரம் நேராக எடுத்து சென்று கல்லாவில் இருப்பவரை அதாலேயே அடித்து காயப் படுத்த வேண்டும் என்று தோன்றும்.
இதற்கு என்னதான் வழி என்று தெரியவில்லை. எல்லோரின் உணவான இட்லியின் விலையை எல்லா இடத்திலும் ஒன்றாக இல்லாவிட்டாலும் ஏற்றுகொள்ளும் அளவிலாவது வைத்திருக்க என்னதான் வழி. இது அவசரத்திற்கு இரண்டு இட்லியை பிட்டு வாயில் போட்டுக் கொண்டு ஓடும் சராசரி தமிழனின் ஏக்கம்...
பி. கு: இட்லியில் வழக்காமாக கிடைக்கும் இட்லி மட்டும் இல்லாமல், மதுரை மல்லி இட்லி ( இதுதான் இப்போது குஷ்பு இட்லி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது), மினி இட்லி, சாம்பார் இட்லி, ரவா இட்லி என இட்லியிலும் பல வகை வந்து நமது பர்சை காலி செய்கின்றன.
