Thursday 14 June 2012

பாண்டிச்சேரியிலிருந்து சரக்கு கடத்துவது எப்படி

நான் குடிப்பதில்லை. அதனாலேயே குடிப்பவர்கள் பற்றியும் குடி பற்றியும் நிறைய விஷயங்களை கவனிக்க முடிந்திருக்கிறது.

இது இன்றைய புதுச்சேரியான பாண்டிச்சேரிக்கு பீர் / சாராயம் குடிக்க வருபவர்களுக்கு சில டிப்ஸ் தரவேண்டி எழுதியது. நான் அதிகம் பயணங்களை விரும்புபவன். சூழ்நிலை காரணமாக அதிக தூரம் பயணிக்க முடியாது. நான் பாண்டிச்சேரியில் இருந்த வரை அடிக்கடி கடலூர் அல்லது விழுப்புரம் பயணிப்பது வழக்கம். இது இல்லாமல் அடிக்கடி பெங்களூரு, சென்னை பயணங்களும் இருக்கும். இப்போது விழுப்புரம் சென்னை மட்டுமே பயனிக்கிறேன். 

சரி விஷயத்துக்கு வருவோம். தமிழகத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு வருபவர்களில்(குறிப்பாக ஆண்கள்) 95% பேர் தண்ணியடிப்பதை நோக்கமாக கொண்டே வருவர். அன்றும் சரி இன்றும் சரி வெள்ளி முதல் ஞாயிறு வரை லாட்ஜுகளில் இடம் கிடக்காது மற்றும் விலையும் அதிகம். வருபவர்கள் என்னதான் இங்கு குடித்தாலும் ஊருக்கு போகும் போது ஒரு குவாட்டரையாவது வாங்கி எல்லை தாண்டி எடுத்து போய்விட வேண்டும் என உறுதி கொண்டிருப்பர். இதில் அடிக்கடி கடலூரிலிருந்து வந்து கன்னியக்கோவிலிலும் விழுப்புரத்தில் இருந்து வந்து மதகடிப்பட்டிலும் தண்ணியடிப்பவர்களும் விதிவிலக்கல்ல. மேலும் பாண்டிக்கு போகிறேன் என்றாலே ஏதோ அந்த காலத்தில் சந்தைக்கு போவோரிடம் பட்டியல் கொடுப்பது போல் ஒரு நீண்ட லிஸ்ட் கொடுத்து அனுப்பும் நண்பர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஜெ.ஜெ. டாஸ்மாக்கின் மூலம் எவ்வளவுதான் நல்ல சரக்கு விற்றாலும் அது ஏனோ பாண்டி மற்றும் கோவா சரக்கின் மீது தமிழக குடிமகன்களுக்கு ஒரு தீராத காதல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 

மேலே சொன்ன காரணங்களால் பாண்டிக்கு வந்து இரண்டு நாள் ரூம் போட்டு முக்கி முக்கி, தெளிய தெளிய தண்ணி அடித்தாலும் திரும்ப ஊருக்கு கிளம்பும் போது ஒரு குவாட்டராவது வாங்கி பொட்டியில் பத்திரப் படுத்தி ஊருக்கு எடுத்து போவதை வாடிக்கையாக வைத்திருப்பர் நம் குடிமகன்கள். பேருந்தில் டிக்கெட் வாங்கறாங்களோ இல்லையோ இதை வாங்கி வைத்துக் கொண்டுதான் அவர்களின் ரிடர்ன் ஜர்னியையே துவங்குவார்கள்: நம்மவர்கள். இந்த பாண்டி தமிழக எல்லை பிரச்சனையில் தண்ணி தர மாட்டேன் என கூறும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா வை மாதிரியே பாண்டிக்கும் தமிழகத்துக்கும் ஒரு வாய்க்க தகராறு உண்டு. இது முதல் முறை மாட்டிக் கொள்ளும் வரை அநேக  குடிகாரர்களுக்கு தெரியாது. பாவம். வாங்கி பத்திரமாய் பொட்டியில் வைத்திருக்கும் சரக்கை பாண்டிச்சேரி தமிழக எல்லையில் செக் போஸ்டில் போலீஸ்காரர் சோதனை செய்கையில் எடுத்து காண்பிக்கும் பலரை நான் பார்த்திருக்கிறேன். ஒரே ஒரு பாட்டில்தான் என நிறைய பேர் கெஞ்சுவார்கள். சார் திறந்துதான் எடுத்து வந்தேன் என பலர் சட்டம் பேசுவார்கள். ஆனால் மதிப்பிற்குரிய தமிழக போலீசாருக்கு கடமையே உருவான அவர்களுக்கு இந்த கேஸ் அல்வா சாப்பிடுவது போல். குவார்டருக்கு குவார்டரும் கிடத்துவிடும். சைட் டிஷ்ஷாக கேசும் கிடைத்துவிடும். அந்த பிரயாணியும் தனது பயணத்தை தொடர 500ரூ முதல் 1000 ரூ வரை மொய் எழுதிவிட்டு வந்து அதே பேருந்திலோ அல்லது அடுத்த பேருந்திலோ ஏறி ஊர் பயணத்தை குவாட்டர் போன வருத்ததுடன் தொடர்வார். 

இந்த செக் போஸ்டுகளில் குவார்டர் பாட்டில்களுக்காக நடத்தப்படும் சோதனைகள் எப்படி நடக்கின்றன. எதனடிப்படையில் இவை நடக்கின்றன என தீவிரமாக ஆராய்ச்சி செய்ததில் நமது குடிராஜாக்களுக்கு தேவையான பல ரகசிய தகவல்கள் சிக்கின. முக்கியமானது நீங்கள் குடிக்காமல் ஒரு குவாட்டர் வாக்கி செல்லும் வெளியூர்காரர் என்பது கடைக்காரர் வழியாக போலீஸ் இன்பார்மர்களுக்கு அல்லது நேரடியாக போலீஸ்காரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. எந்த ஊருக்கு போறீங்க என்பது எல்லாம் உங்களின் உளறலின் வாயிலாகவும் ஒரு யூகத்தின் வாயிலாகவும் அறியப்படும். இவர்கள் மூலம் கிடக்கும் தகவலை கொண்டே இந்த சோதனைகள் நடத்தப்படுகின்றன. அப்படி சோதனை நடக்கிறது என்றால் கண்டிப்பாக ஏதாவது ஒரு செக் போஸ்டில் யாராவது ஒருவர் ஏதாவது தடத்தில் மாட்டியிருப்பார். இதில் சொந்த வாகனத்தில் (கார், வேனில்) வருபவர்கள் திரும்புகையில் பொட்டியாக வாங்கி செல்வர். இதெல்லாம் அல்வா சாப்பிடுவது போல இவர்களுக்கு. மாட்டிக்கொண்டு தண்டம் அழுதுவிட்டு போகும் வாகனங்களை நிறைய பார்க்கலாம். சனி, ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் இது நிறைய நடக்கும். வேட்டையும் அதிகமாகவே இருக்கும். இதிலிருந்து தப்ப எளிய வழி ரயில் பயணம். இங்கு இந்த சோதனை நடப்பதில்லை. சொந்த வாகனமென்றால் முக்கிய சாலை வழியாக செல்லாமல், உட்புற சாலைகளை பயன்படுத்தி தமிழக எல்லைக்குள் நுழைவது. இதனை கடலூரிலிருந்து விருந்துக்கு பாட்டில் வாங்க வரும் குடிமகன்கள் திறம்பட பயன்படுத்துவதை பார்த்திருக்கிறேன். 

நம் குடிமகன்கள் உஷாராக தன்னுடன் வரும் பெண்களின் பைகளில் வைத்து கடத்த ஆரம்பித்தனர். அதை அறிந்த நமது ஸ்காட்லாந்து யார்டு போலீசார் இப்போதெல்லாம் அவர்களின் பைகளையும் விடுவதில்லை. பல முறை மாட்டிக்கொள்ளும் பை கேட்பாரற்று கிடக்கும். போலீசாரும் கேட்டுப் பார்த்துவிட்டு கிடைத்தவரை லாபமென பையுடன் இறங்கி சென்ருவிடுவர். 

சமீபத்தில் பாண்டிச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்கையில் நடந்த ஒரு சம்பவம்தான் இந்த பதிவை எழுத மூல காரணம். அந்த நபர் மதகடிப்பட்டில் அவசரமாக ஏறினார். மதகடிப்பட்டு தாண்டியவுடன் செக் போஸ்ட் இருக்கிறது. அங்கே பேருந்தை நிறுத்திவிட்டார்கள். போலீகாரர் ஏறியவுடன் அந்த நபர் அவசரமாக என்னை தாண்டி உள்ளே நுழைய முயற்சித்தார். வயிற்றில் ஏதோ தட்டுப்பட்டது. என்னவென்று பார்த்தால் குவாட்டர் பாட்டிலை பேண்டில் சொருகி இருந்தார். புரிந்துவிட்டது எனக்கு. பாவம் எப்படி தப்பிப்பது என புரியாமல் விழிக்கிறார் என. அடச் சாமி கீழே இறங்கி பேசாமல் நில்லுங்கள். அவர்கள் சோதனை செய்துவிட்டு சென்ற பின் ஏறிக் கொள்ளுங்கள் என அவருக்கு மட்டும் கேட்கும் படி கூறினேன். உள்ளே சென்றால் பேருந்து பின்புறமிருந்து மற்றுமொரு போலீஸ்காரர் தேடிக் கொண்டு வருவார். அவரது தொப்பையில் இவர் உராசினால் கண்டுபிடித்துவிடுவாரென் சொன்னேன். அந்த நபரும் கீழே இறங்கி நின்றார். இரண்டு போலீஸ்காரர்களும் தேடி முடித்து ஏதும் கிடைக்காமல் இறங்கி சென்ற பின் அந்த நபரும் பேருந்தில் ஏற பின்னர் பேருந்து புறப்பட்டு பயனித்தோம். அவரும் ஏதோ அவரது உயிரையே காப்பாற்றியதை போல கண்களாலேயே நன்றி சொல்லிக் கொண்டு வந்தார் இறங்கும் இடம் வரும் வரை. அன்று நான் அறிந்து கொண்ட பாடம் ஒரு பாட்டில் அல்லது இரண்டு பாட்டில் கடத்த ஏதுவான வழி பேண்டுக்குள் சொருகி எடுத்து வருவதுதான்.இது நடந்து 4 வாரம் ஆகிறது. அன்று முடிவு செய்தேன். பாண்டிச்சேரியில் இருந்து சரக்கை தமிழகத்துக்குள் எடுத்து வருவதில் (கடத்துவதில்) உள்ள சிக்கல்களையும் சிக்கல் இல்லாமல் கடத்த இருக்கும் வழிமுறைகளையும் எனது தமிழக குடிமகன்களுக்கு ஒரு பதிவின் மூலம் எடுத்து எழுதுவது என. 

இந்த சோதனைகள் ECR சாலையிலும் திண்டிவனம் சாலையிலும் பேருந்துகளில் குறைவாகவே இருக்கும்.  ஆனால் தனியார் வாகனங்களில் (கார், வேன்) இந்த தடங்களிலும் சோதனைகள் நடக்கிறது என்பதை அறியவும்.

மேலே கூறிய வழிமுறைகளை பயன்படுத்தி பாண்டிச்சேரி வரும் குடிமகன்கள் சரக்கு கடத்தும் போது ஜாக்கிரதையாக் இருக்கும் படியாக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது காரைக்காலில் இருந்து சரக்கு கடத்தும் குடிமகன்களுக்கும் பொருந்தும்.

இந்த விவரங்களை கொடுத்தற்காக யாரும் எனக்கு நன்றியெல்லாம் கூற வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.