Thursday 26 January 2012

இது ஏனோ மகிழ்வான குடியரசு தினமாக இல்லை

குடியரசு தினம் என்பது எதற்கு என்ற அளவில்தான் எனது இந்திய அரசியல் அமைப்பின் ஞானம் இருக்கிறது. ஆனால் வருடாவருடம் குடியரசுதினம் சந்தோஷமான நாள். பள்ளியில் மிட்டாய் குடுப்பதில் ஆரம்பித்த சந்தோஷம்அது. ஒரு நாள் விடுமறையில் கிடைக்கும் சந்தோஷம். டி.வியில் வண்ணமயமான வண்டிகள் வரிசையாக போவதை பார்த்து ரசித்த காலங்கள். சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்திற்கும் இந்த வண்ணமயமான வண்டிகளும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகளும் பெரிய வித்யாசம். அணிவகுத்து வரும் டாங்கிகளையும் முப்படையின் அணிவகுப்பு ஆகியவற்றை பார்த்து பெருமை கொண்டதெல்லாம் இன்று அர்த்தமற்றதாக தோன்றுகின்றன.

ஒரு சில வருடங்களாகவே இந்த சம்பிரதாயங்களின் மேல் இருந்த மாயை மறைந்துகொண்டே வருகிறது. அரசியல்வாதிகள் போலியான செய்கைகள், இந்திய அரசியலைப்பின் போலித்தனம் மற்றும் நியாயமற்ற நடவடிக்கைகளால் என பல காரணங்களால் குடியரசின் மேல் இருந்த நம்பிக்கையை வெகுவாக குலைத்துவிட்டது. ஊழல், பணம் இருப்பவன், வல்லவன் வகுத்ததே சட்டம் என உருமாறிவிட்டது இந்த நாடு.

இதையெல்லாம் விட மத்திய அரசின் மௌனம் பல விஷயங்களில் இந்திய அரசின் கட்டமைப்பின் மீதிருந்த கடைசித் துளி நம்பிக்கையையும் தகர்த்துவிட்டதால் இந்த குடியரசு தினம் மகிழ்ச்சியைவிட துக்கமாகவே தெரிகிறது. 

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த தவறியது மட்டுமில்லாமல், அதற்கு துணை போனதில் ஆரம்பித்தது ஒரு வெறுப்பு.

பேரறிவாளனை தூக்கில் போட காட்டிய அவசரமும் அக்கறையிலும் இந்த வெறுப்பு கூடியது. கூடங்குளம் அணுமின்நிலையத்தை அமைப்பதில் அந்த பகுதி மக்களின் விருப்பத்தையும் மீறி காட்டப்படும் ஆர்வம் பல விஷயங்களை உணர்த்துகிறது. மத்திய அரசாங்கம் பல அயல்நாடுகளின் தொழில் நலத்தை இந்தியாவில் நிலைநிறுத்த உதவும் ஒரு ஏஜெண்ட் போலத்தான் செயல்படுகிறது. தமிழகம் என்று வரும்போது இங்கு வாழும் மக்களின் விருப்பங்களை பற்றி ஏதும் கவலை படாமல் ஒரு ஆதிக்க மனப்பான்மையுடந்தான் மத்திய அரசாங்கம் நடந்துகொள்கிறது. முல்லைபெரியாறு அணை பிரச்சனையில் காலந்தாழ்த்தும் தந்திரத்தின் மூலம் இரு மாநிலத்தவரும் அடித்துக் கொண்டாலும் பரவாயில்லையென்று மௌனம் சாதித்து தப்பித்துகொள்கிறது. காங்கிரஸ் ஆளும் கேரளத்திற்கு பாதிப்பு ஏற்பக்கூடாது என்பதனால் தமிழகத்திற்கு பாதகமான பல விஷயங்களை இந்த விஷயத்தில் செய்திருக்கிறது மத்திய அரசாங்கம்.

இதையெல்லாம் விட மிகவும் மனதை உறுத்தும் விஷயம். மீனவர்களை இலங்கை கடற்படை துன்புறுத்துவதையும், கொல்வதையும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் மத்திய அரசின் செயலை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதை போன்ற பல சம்பவங்களால் இந்திய கட்டமைப்பின் மீது இருந்த நம்பிக்கை போய் வெறுப்புதான் வருகிறது. பிறகு ஏன் இந்த குடியரசு தின கொண்டாட்ட சம்பிரதாயங்கள். அதற்கும் நமது வரிப் பணத்தை செலவு செய்வார்கள். அந்த செலவிலும் ஊழல் செய்வார்கள்.

1 comment:

  1. ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணக் குவியலாய் தங்களின் பதிவு..

    ReplyDelete